Thursday, July 1, 2010

விஷ­ம் போல ஏறுது விலைவாசி! எப்படி வாழ்வது நீ யோசி!

வி­ஷம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

அரிசி விலை ஆகாயத்தில்...
பருப்பு விலை பட்டத்தைப் போல உயரத்தில்...
காய்கறி விலையும்
சூறாவளிக் காற்றாய் நம்மைச் சுற்றி சுற்றி அடிக்க...

வி­ஷம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

கேஸ் விலையேற்றத்தால்
பெண்கள் கண்ணீர்
பெட்ரோல் விலையேற்றத்தால்
எங்கள் கண்ணீர்

விஷ­ம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

மக்களைக் காப்பாற்ற
"மன்னாதி மன்னன்' இல்லை...
ஏழைகளைக் காப்பாற்ற
எந்த அரசியல்வாதியும் இல்லை...

வி­ஷம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

விரைவில் வரப்போகுது தேர்தல்
வெற்றிக்காக போராடுபவர்கள்
எஜமான்கள்...

ஓட்டுக்குப் பணம் என்பது
ஒலகமே அறிஞ்சாச்சு...

எவ்வளவு கேட்கலாம்
யோசிச்சுப் பாத்தா
ஒரு ஓட்டுக்கு
ஒரு லட்சம் கேக்கலாம்...

அஞ்சு வரு­த்துக்கு கணக்குப் போட்டுப் பாத்தா
ஒரு நாளைக்கு அம்பத்தஞ்சு ருவாய்க்கும்
குறையாத்தான் வருது...

கணக்குப் போட்டுப் பாருங்க...
தப்பா இருந்தா சொல்லுங்க...

விஷ­ம் போல ஏறுது விலைவாசி!
எப்படி வாழ்வது நீ யோசி!

Wednesday, June 30, 2010

''மங்கை சூதகமானால்...

பெட்ரோல், டீசல் உயர்வால் ஏழைகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என்றும் இந்திய மக்கள் புத்திசாலிகள் இந்த விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள் எனவும் இந்தியப் பொருளாதார மேதையும் பாரதப் பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங் ஜி.20 மாநாட்டில் விமானத்தில் பறந்து விட்டு டெல்லி வீதிகளில் உயர்ரக காரில் பறப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலை பகிர்ந்த செய்தி இன்றைய தினத்தந்தியில் வெளியானது.

இதேபோல கோவையில் நமது முதல்வரும் ஒரு தகவலைச் சொல்லியிருந்தார். அதாவது இன்னும் அதிகமாக உயர்த்தப்படும் என்று நினைத்திருந்தேன். பரவாயில்லை. தாங்கிக் கொள்வார்கள் நமது மக்கள் என்ற ரீதியில்.

எனக்கு இந்நேரத்தில் தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது...

''மங்கை சூதகமானால்
கங்கையிலே மூழ்குவது;
கங்கையே சூதகமானால்
எங்கே போய் மூழ்குவது''

Tuesday, June 29, 2010

கந்தகத்தினால் மட்டுமல்ல...

தீக்குச்சி எரிகிறது
கூடவே என் மனதும்...

பெட்டிக்குள் அடைபடும்
தீக்குச்சிகளைப் போலவே
நாங்களும்
அடைபடுகிறோம்...

குச்சிகளாய் சிதறுவதில்
குதுகலம் இருப்பினும்
எங்களை அடைத்து வைப்பதில்தான்
ஆனந்தம் காண்பார்கள் முதலாளிகள்...

மாலை நேரமே
மனதுக்குச் சந்தோஷம்...

இல்லம் திரும்பும் பேருந்தே
எங்களின் 
புஷ்பக விமானம்...

வீட்டில்
எரியும் நெருப்பில்
எங்கள் முகமும்
எங்களுக்கே தெரியும்...

ஒரு நிமிடம்

தீக்குச்சி எரிவது
கந்தகத்தினால் மட்டுமல்ல...
எங்களின் கண்ணீராலும்...

Sunday, June 27, 2010

ஆழமென்னும் அளவுகோல்

நீ நிரம்பித் தளும்பியபோதெல்லாம்
எங்களுக்குள் உற்சாக மடை வெள்ளம்...

கால் சட்டை மட்டுமே அணிந்த
அந்நாட்களில்
கவலைகள் ஏது?

உன் ஆழமென்னும்
அளவுகோல் அப்போதெல்லாம்
கண்களுக்குத் தெரிவதில்லை.

எத்தனை அடி உயரமோ
எங்களுக்குக் கவலையே இருந்ததில்லை...

எத்தனை ஜீவராசிகள்
உனக்குள்ளே வாழ்ந்தவர்கள்...

ஒரு புறம்
வாலைக் குமரிகளின்
வர்ண ஜாலங்கள்
அதைக் குறி வைக்கும்
வாலிப உள்ளங்கள்...

மறுபுறம்
யாருக்கும் அடங்காத
கால்சட்டைகளின்
குதியாட்டம்

உன்னைப் பார்த்துப் பார்த்து
ஆசைப்பட்ட அந்த நாட்கள்...

இப்போது நகரத்தின்
நாகரீக வாழ்க்கையில்
தொலைந்து போய் விட்டாலும்

குளியலறைக்குள்
அவ்வப்போது உன் ஞாபகம்...

இப்போது வறண்டு போய்
கை நனைக்கும் அளவுக்கு மட்டுமே
உன்னை நீ சுருக்கிக் கொண்டதை
நினைக்கையில்

கடந்து போன வயதும்
கண்மாய் நிரம்பி வழிந்த அந்நாட்களும்
திரும்பவும் வாராதோ?

Friday, June 25, 2010

தமிழ்

சங்கத் தமிழ்
இலக்கணத் தமிழ்
எதுகைத் தமிழ்
மோனைத் தமிழ்

கவிச்சக்கரவர்த்தியின் தமிழ்
காளமேகப் புலவனின் தமிழ்
பாட்டுப் புலவனின் தமிழ்
பாவேந்தனின் தமிழ்

கவியரசுவின் தமிழ்
கலைஞரின் தமிழ்
அமுதத் தமிழ்
அழகுத் தமிழ்

இணையத் தமிழ்
இனிய தமிழ்
இவை அத்தனைக்கும் கட்டியம் கூறும்
மழலைத் தமிழ்...

Tuesday, June 8, 2010

பக்சே...

மாவீரன் பிரபாகரனை பெற்ற தாய் பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு வர அனுமதி தரவில்லை.   ஆனால் ராஜபக்சேவுக்கு மட்டும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது கொடுமை.
ஏன் இந்த இனதுரோகம்?’’
-வைகோ

ரத்தக்கறையை கழுவப்பார்க்கிறார் ராஜபக்சே
-சீமான்

ராஜபக்சே கைவசம் என்ன திட்டம் வைத்துள்ளார்
- டி.ராஜா

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு

உணர்வுகள் கொந்தளிக்கட்டும்...
உனக்குள்ளும்...

Monday, June 7, 2010

ஒரு கண்டனம்

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. இதோ பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலை உயரப் போகுது. அனேகமாய் இப்போதே பெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்திருக்கும். மம்தா பானர்ஜி அத்தனை பிரச்சினைக்கிடையேயும் ஓவியம் வரைகிறார். (இது கூட உங்களுக்கு பிரச்சினையா?) கலைஞர் வழக்கம் போல் கடிதம் வரைகிறார் மன்மோகன்சிங்குக்கு. தினத்தந்தியில் தலைப்புச் செய்தி. எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக என்கிறார்கள். ஆனால் ஒரு முன்னேற்றமும் இதுவரை இல்லை. இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். இத்தனை விஷயங்கள் இருக்கும் போது இதற்கெல்லாம் ஒரு பதிவு அவசியமா எனத் தோன்றும் படிக்கும் நண்பர்களுக்கு... (படிக்கிறார்களா என்பது வேறு விஷயம்.)

ஆனால் சொல்ல நினைக்கும் விஷயங்களை சொல்லி விடுவோம் என்பதற்காகவே இந்தப் பதிவு.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேறென்ன செய்வது அதானே வழி.
தமிழகத்தின் முதன்மைத் தொலைக்காட்சியாம் சன் டி.வி. டாப் டென் என்ற பாடல் வரிசைக் காட்சியை ஒளிபரப்பினார்கள்.
அதற்கு ஒரு முன்னோட்டம். இந்நிகழ்ச்சி யாருடைய மனதையும் புண்படுத்துபவை அல்ல... என்று. (புண்படுத்தவில்லை என்றால் இதை நான் எழுதவே மாட்டேன்.)
அந்த நிகழ்ச்சியில் வழக்கமாக ஒரு பிரபல திரைப்படத்தை எடுத்து நக்கல் நையாண்டி செய்யப்படுவதுண்டு.
நேற்றைய நிகழ்ச்சியில் அப்படி செய்யப்பட்ட திரைப்படம்
தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்
திரைப்படத்தை விமர்சனம் செய்யட்டும் பரவாயில்லை. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் வாந்தி வருகிற அருவருப்பை வரவழைக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைப் பார்த்த அத்தனை தலைவரின் ரசிகர்களுக்கும் நிச்சயம் கோபம் வந்திருக்கும். அந்த அளவுக்கு மட்டமாய் இருந்தது .
இது என்ன ரசனை.
அதற்கு முதல்நாள் தான் அந்தத் திரைப்படத்தை எனது அலுவலகத்தில் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஒரு விஷயத்தை சிலாகித்தார்.
அதாவது ஒரு தெற்காசிய நாடுகளில் மட்டுமே படம் பிடிக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் (3 நாடுகளில் மட்டும்) ஏற்படுத்திய தாக்கத்தை வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட எந்தத் திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சி அப்போது வெளிநாட்டுப் படங்களில் கூட இடம்பெற்றதில்லையாம். இப்போது இடம் பெறுகிறதா எனத் தெரியவில்லை. அந்த எக்ஸ்போ கண்காட்சியைப் படம் பிடிக்க அந்த அளவுக்கு சிரமப்பட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அந்தப் படத்தின் திரைக்கதை ஒரு சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு திரைப்படத்தை இத்தனை அருவருப்பாய் நையாண்டி செய்வது காலக்கொடுமை.
தயவு செய்து இதை உண்ர்ந்து கொள்ளுங்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு.

Friday, June 4, 2010

தேவ தூதர்கள்

இன்னைக்கு சாயங்காலம்
ஆபீசில இருந்து கெளம்புனேன்.
மவுண்ட் ரோட்ல ஒரே ட்ராஃபிக்!

என்னவா இருக்கும்?
ஒண்ணு முதலமைச்சர் போவாரு;
இல்லயின்னா மந்திரிக போவாக
அவ்ளோதான்!

இப்ப அது இல்ல மேட்டரு...

என்னன்னா
அவுக ஆட்சி நடந்தா...
அய்யய்யோ பாரு
இந்தம்மா வந்தாலே இப்புடித்தான்...
நியூசு கெளம்பும்...

அய்யா வந்தப்புறம்
இவுகளும் இப்படித்தானா...

சனங்க தூத்தும்...

இதுதான் மேட்டரா...
அட இது தெரிஞ்ச கததான...

அப்ப என்னதாம்பா மேட்டரு...

ஒண்ணுமில்லப்பா...
வாகனங்கள ஒழுங்குபடுத்துற
போலீசுகாரவுக இருக்காகள
அவுகள பத்தித்தான்...!

பாவம்பா அவுக...
போ.போ..போ...ன்னு மக்க மேல
எரிஞ்சு விழுந்து
இங்க ஓடி அங்க ஒடி
மனுசங்கள பிராண்டி எடுத்து
அங்க நிக்கிற பொம்பள (போலீசு) புள்ளைகளையும்
வெரட்டி எடுத்து

நம்ம தேவ தூதர்கள
(எல்லாம் நம்ம மந்திரிகதான்)
காப்பாத்த
அவுக பட்ட பாடுதான்
இங்க மேட்டரு!

என்ன மேட்டரு...
பதவியில இருந்தாலும்
மனுசங்களா இருங்க...

மனுசங்களா இருந்தீங்கன்னா
மறுபடியும் பதவி...
இல்லாமப் போனா
அட ஒங்களுக்கே தெரியும்.


கவித கொஞ்சம் போரடிச்சிச்சு.
அதான் செய்தி சொன்னேன்...

Wednesday, June 2, 2010

அரங்கேற்றம்


நீ
விரல் சொடுக்கும்
விந்தை பார்த்து
ஏங்கிப் போயின
என் விழிகள்...

அடடா
ஒரு
நடன அரங்கேற்றம்
நடந்து முடிந்துவிட்டதே
என்று...

Tuesday, June 1, 2010

பொறாமை


மனதுக்குள்
கிழித்தெறிய முடியாத
பக்கங்கள்
இன்னும்
இம்சித்துக் கொண்டிருக்கையில்

ஒவ்வோர் நாளையும்
அழகாய் கிழித்தெறியும்
நாட்காட்டியைப் பார்க்கையில்

பொறாமை வருகிறது
மனதுக்குள்...!

Monday, May 31, 2010

ரகசியம்


நான்
தொலை தூரத்தில்
இருக்கையில்
சிணுங்குகிறாய்
தொலைபேசியில்

உன்
அத்தனை
ஆசைக் கேள்விகளுக்கும்
அன்பாய் பதிலுரைக்கிறேன்
நான்

உனக்குத் தெரியுமா?

நம் இருவரின்
குரல்களும்
முட்டி மோதிக் கட்டிப்
பிடித்துக் கொள்ளும்
ரகசியம்...?

Friday, May 28, 2010

களத்து மேடு



காசுக்குப் பதில்
நெல்லைக் கொடுத்து விட்டு
அம்மா வாங்கித் தந்த
கருப்பட்டித் தோசையும்

"கார் கார' அம்மாயி
சுட்டுக் கொடுத்த இட்டிலியும்
அதற்கு தொட்டுக்கொள்ள
செம்பழுப்பு நிறச் சட்டினியும்

நெல் மணிகளைத்
தூற்றும்போது
மனதுக்குள்
ஒட்டிக் கொள்கிற
உற்சாகமும்...

கூட்டம் கூட்டமாய்
அசராது உழைத்த
அத்தனை
முகங்களும்...

நினைவுத் தடங்கள்
நெஞ்சுக்குள்ளே
சிறகடிக்கிறது...

கொஞ்சம் கொஞ்சமாய்
காணாமல் போய்க் கொண்டிருக்கும்
களத்து மேட்டை
கடந்து செல்கையில்...

Thursday, May 27, 2010

இப்போது...

நகர வாழ்க்கையின்
எந்திர நிகழ்வுகள்
தொலைத்து...

நல்ல தண்ணீரில்
நாலு நாளாவது
குளித்து...
தொலைக்காட்சியின்
தொல்லைகள்
துறந்து...

நண்பர்கள்
முகாமுக்குள்
நானும் கொஞ்சம்
தொலைந்திருந்து...

கண்மாய்க் கரைகளில்
காலாற நடந்து...

வயல்வெளிப்
பெண்களோடு
வம்பளந்து...

முளைக்கொட்டுத்
திண்ணையில்
ஊர் ரகசியம் பேசி...

முந்தைய வாழ்க்கையைத் தேடி
எங்கள் கிராமத்தில்
மீண்டும் நான்...

ஆனால்...?!
....................
....................

துக்கம்

கிடத்தி வைக்கப்பட்ட
சவத்துக்கு மாலையிட...

அதுவரை
அமைதியாய் இருந்த
உறவு பந்தங்கள்

திடீரென்று
வீறிடுவது வியப்பாகவே?!

இருந்தபோதிலும்...

நமக்கும்
கண்ணீர் வரவழைக்கும்
அவர்களின் துக்கம்

மரியாதைக்குரியதே!

மல்லிகை

தலைவாழை இலையில்
தண்ணீர் தெளித்து...

அழகாய் கோர்த்திருந்த
மல்லிகைச்சரத்தை
மடித்துத் தருவதைப் பார்க்கும்போது
மனைவிக்கு மல்லிகை
வாங்க வேண்டும்
என்ற ஆசை எழுகிறது.

அதே ஒரு முழம்
மல்லிகையை...

மகத்துவம்
அறியாமல்...

பாலீதீன் பையில்
கசக்கித்
தருகையில்

வலிக்கிறது மனது!

அப்பத்தா

என்
சிறு பிராயம்
முதல்

உன்னை
கண் பார்வை
அற்றவளாகத்தான்
அறிந்திருந்தேன்...

ஒரு டம்ளர்
ஊற வைத்த அரிசி

அதை
அம்மியில் வைத்து
நீ அரைக்கும் லாவகம்
இப்போது கூட
எவரிடத்தும்
காண முடியவில்லை

நாளும் பொழுதும்
நீ இருக்கும் விரதம்...

விழிகள் மூடியிருப்பினும்
வீடென்னவோ
கோயில் மாதிரி
அத்தனை சுத்தம்...

வீட்டின்
முற்றம் முதல்
பின் வாயில் வரை
அத்தனை துல்லியமாய்
அளந்து வைத்திருக்கும்
ஆர்வம்...

நகத்தின்
ஓசை கேட்பினும்
வந்தது யாரென்று அறியும்
உன் இமைகள்

சுத்தம்...
சுத்தம்...
எல்லாவற்றிலும்
சுத்தம்...

என்ன செய்ய
உன்னை
மரணப் படுக்கையில்
வைத்து விட்டு
குளிப்பாட்ட
நீருக்கு அலைகையில்

கிடைத்ததென்னவோ
சேறும் சகதியும்
கலந்த தண்ணீர்
மட்டுமே...

பொறந்த மண்ணு


ழக்கத்திற்கு மாறாய் அப்போது அந்த வீடு காணப்பட்டது. வீடெங்கும் மாலைகள் இறைந்து கிடந்தன. யாருக்கும் ஒவ்வாத ஒருவித வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது ஊதுவத்தி! அழுகைச்சத்தம் உரக்கக் கேட்டுக்கொண்டிருந்தது.
வீட்டின் நடுநாயகமாய் உள்ள சேரில் தப்புக்கோட்டித் தேவர் அமர்த்தி வைக்கப்பட்டு சேரோடு இணைத்து கயிற்றால் கட்டப்பட்டிருந்தார். அவருக்கு கழுத்தே கொள்ளாத அளவிற்கு மாலைகள் போடப் பட்டிருந்தன. மாலைகள் அதிகமானதால் அவரின் பாதி முகம் மறைந்திருந்தது. வீட்டின் வெளியே பந்தல் போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த நீளமான மரப் பெஞ்சில் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
"எப்ப உயிர் போச்சாம்...''
அருகிலிருந்த ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
"இப்பத்தான் ஒரு ரெண்டுமணிநேரம் இருக்குமாம்...அதுவரைக்கும் அய்யா நல்லாதான் இருந்துருக்காரு... பாவம்.''
".ஹும் என்ன செய்ய...?''
எனக்கு கொஞ்சம் முன்புதான் விஷயமே தெரியும். அரக்கப்பரக்க ஒரு மாலையை வாங்கிக்கொண்டு ஓடினேன். நான் போனபோது இன்னும் நிறைய ஆட்கள் குழுமி யிருந்தார்கள். மனசு நிறைய துக்கத்துடன் அவர் கழுத்தில் என் பங்குக்கு நானும் ஒரு மாலையைப் போட்டேன். அவருடைய கடைசி மகன் ஒரு ஓரமாய் துக்கத்துடன் நின்றிருந்தான். அவன் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னேன். அவன் முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கும் துக்கம் பற்றிக்கொண்டு வந்தது. தெரிந்தவர்கள் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னார்கள். நானும் அவர்களைப் பார்த்து லேசாய் புன்முறுவல் செய்தேன்.
நேரம் ஆக ஆக ஆட்கள் ஒவ் வொருவராய் கூடிக் கொண்டிருந் தார்கள். நான் எவரிடமும் பேசாமல் ஒரு ஓரமாய் நின்று கொண்டி ருந்தேன். என் மனதுக்குள் அவரைப் பற்றிய கடந்தகால நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன.
எங்கள் கிராமம் ஓரளவு செழிப் பாய் இருந்த காலம் அது. மழையும் அவ்வப்போது ஓரளவு பெய்து கொண்டிருந்தது. மேலும் பற்றாக் குறைக்கு சில பெரிய மனிதர்கüன் பம்புசெட்டுக்களும் கிராமத்திற்கு உதவிக்கொண்டிருந்தன. விளைச் சலும் சொல்-க்கொள்ளும்படி யாகவே இருந்தது. ஊரின் நடுநாயக மாய் ஒரு மிகப்பெரிய ஆலமரம் மேலும் அழகு சேர்த்துக்கொண்டி ருந்தது. மரத்தின் கீழ் பிள்ளையார்; சிலையாய் எப்போதும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார். பஞ்சா யத்து மடத்தில் ஊர்ப்பெரிசுகள் அரசியல் என்ற பெயரில் வம்பளந்து கொண்டிருப்பார்கள். இளசுகள் கோ-க்குண்டும், கிட்டிப்புள்ளும், கபடியும் விளையாடிக் கொண்டி ருக்கும்.
அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். காலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் பழக்கம் அப்போது எனக்கு இருந்தது. (இப்போது நகரத்தின் நரக வாழ்க்கை யில் ஏழு மணிக்குக் குறைவாய் எழவே முடியவில்லை என்பது தனிக்கதை.) அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் என் குரல்தான் அருகில் உள்ள கிராமத்து மக்களை உசுப்பிவிடும். "உருண்டேய்....'' சைக்கிள் மணியின் ஒ-ச்சத்தத் தோடு "உருண்டேய்' சத்தமும் வாண்டுகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் எழுந்துகொள்ள வைக்கும். "உருண்டேய்' என்றால் என்னவோ ஏதோ என நினைத்து விடாதீர்கள். அது ஒரு அற்புதமான சுவையுடன் இருக்கும் மைதாமாவுப் பணியாரம்தான். முழுக்க தேவரின் கைப்பக்குவத்தில்தான் அது செய்யப் பட்டிருக்கும். காலை ஐந்து மணிக் குள்ளாகவே சுடச்சுட பாத்திரத்தில் நிரப்பி வைத்தி ருப்பார். நான் அதை எடுத்துப்போய் "உருண்டேய்... உருண்டேய்' என சைக்கிüல் விற்று விட்டு வந்த காலம் இப் போதும் என் மனத்தை விட்டு அகலுவதாயில்லை.
தப்புக்கோட்டித்தேவரின் (அவரின் பெயர்க்காரணம் இதுவரை எனக்குத் தெரியவேயில்லை. நானும் மற்றவர்களிடம் கேட்டது மில்லை.) கடை ரோட்டு மேல் வீற்றிருக்கும். கடை என்றால் ஏதோ பெரிய அளவுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சிறிய கீற்றுக்கொட்டகை வேயப் பட்ட கூரை. அவ்வளவுதான். அதில்தான் தேவரின் வாழ்க்கை நடந்து கொண் டிருந்தது. எங்கள் கிராமத் திற்கு மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமத்து மக்கள் கூட தேவரின் கடை நோக்கி கருப்பட்டித் தேநீர் அருந்த வருவதுண்டு. அந்த அதிகாலை நேரத்தில் அவர் சுட்டு வைத்திருக்கும் அந்த மைதாமாவு உருண்டையும் கருப்பட்டித் தேநீரும் தேவாமிர்தமாய் இருக்கும். அதுபோக அவர் சுடச்சுட இட்-யும் சுட்டு வைத்தி ருப்பார். ஆனாலும் அந்த மைதா உருண்டைக்கும் கருப்பட்டித் தேநீருக்கும்தான் அந்த ஊரில் மிகப்பெரிய மவுசே.
நான் ஒரு பாத்திரம் நிறைய உருண்டை எடுத்துக்கொண்டுதான் அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்வேன். காலை ஆறு மணிக்குச் சென்றால் ஏழரை மணிக்குள்ளாக நான் வீடு திரும்ப வேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே எல்லாப் பலகாரமும் விற்றுப்போயிருக்கும். அதன்பிறகு நான் வீடு வந்து குளித்துவிட்டு ஸ்கூலுக்குச் செல்ல வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது.
காலங்கள் உருண்டோட உருண் டோட மனித வாழ்க்கையும் வெவ்வேறு பாதைகளில் உருண்டோ டவே செய்கிறது. எங்கள் கிராமமும் வறட்சியால் தள்ளாட ஆரம்பித்தது. ஊரில் மழை பொய்த்துப்போனது. மழை பொய்த்ததால் விவசாயம் குறைந்துபோனது. மக்கள் வெவ் வேறு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய நிலை வந்தது. தேவரின் கடை வருமானம் குறைந்து... குறைந்து... கடைசியில் அவரும் ஊரைவிட்டுப் பட்டணத்தில் இருக்கும் தன் மகனிடம் போய் அடைக் கலமானார்.
நான் தேவரய்யாவைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் எண்ண மும் செயலும் மாறிப்போய் தேவரய் யாவின் நினைப்பு என்னை விட்டு முழுவதுமாய் அகன்று போனது.
நான் நகரத்திற்கு வந்து இரண்டு மூன்று வருடங்களாகி யிருக்கும். காலம் என்னையும் கிராமத்தை விட்டு நகரத்தில் வாழும் மனிதனாக்கியிருந்தது. நகரத்தின் பேருந்துகளில் நானும் ஓடிக் கொண்டிருந்தேன். கூட்ட நெரிசலில் நானும் சிக்கி நசுங்கிக் கொண்டி ருந்தேன். காலை அலுவலகம் வந்தால் இரவு வீடு நோக்கிச் செல்வதே என் வாடிக்கையாகிப் போன காலமாய் என் நகர வாழ்க்கை மாறிப் போயிருந்தது. ஒரு விடுமுறை தினத்தில் தற்செயலாய் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் தலையில் முண்டாசு கட்டி சைக்கிள் ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்தது என்னை சடக் கென திரும்பிப் பார்க்க வைத்தது.
அதே தப்புக்கோட்டித் தேவர்தான்.
என்னைப்பார்த்ததும் அவரும் ரிக்ஷாவில் இருந்து இறங்கிவிட்டார்.
"யப்பூ.... ஒன்னப்பாத்து எம்புட்டு நாளாச்சு...''
வாஞ்சையுடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். நானும் அவரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன்.
"எப்பிடி இருக்கீங்க ஐயா...''
"ம்... இருக்கேண்டா ராசா... ஏதோ இன்னைக்கோ நாளைக்கோன்னு...'' -சலிப்புடனும் அதே நேரத்தில் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டும் சொன்னார்.
"வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ஐயா...'' -நான் கேட்டேன்.
"நல்லா இருக்காக ராசா... நீ எப்ப பட்டணம் வந்த பேராண்டி?'' என்றார்.
"இப்பத்தான்... கொஞ்ச நாளாச்சு...''
"நம்ம வீட்டுக்கு ஒருநா வந்துட்டுப்போ பேராண்டி!'' -அன்போடு அழைத்தார்.
"கட்டாயம் வர்றேங்கய்யா...''
அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
இன்னும் மனதுக்குள் அவரைப் பற்றிய எண்ணம் என்னை விட்டு அகன்றபாடில்லை. "அடடா எப்படி இருந்த மனுஷர் இப்படி வாடி வதங்கிட்டாரே...' அவரைப்பற்றிய நினைப்புடனே நான் தங்கியிருந்த அறை நோக்கி நடந்துகொண்டி ருந்தேன்.
"ம்... சட்டுப் புட்டுன்னு அடக்கம் பண்றதுக்கு ரெடி பண் ணுங்கப்பா...'' -குரல் கேட்டு மறுபடியும் தற்போதைய நிகழ்வுக்கு வந்தேன். சொந்தபந்தங்கள் அனைவரும் கிட்டத்தட்ட வந்தி ருந்தார்கள். தேவரய்யாவின் உடலைக் குüப்பாட்டி முடித்து பூவால் அலங்கரிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த பல்லக்கில் ஏற்றினார்கள். இறுதி ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது.
மயானத்தில் தகனம் செய்யப்பட தேவரின் உடல் கிடத்தப் பட்டிருந்தது.
"எல்லாரும் வந்து அய்யாவுக்கு வாக்கெரிசி போடுங்க...'' யாரோ குரல் கொடுத்தார்கள். தேவரின் மகன்கள் இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தார்கள். சிதைக்கு நெருப்பு மூட்டப்பட்டது.
"எங்க பொறந்த மகராசா, அவருக்கு எங்க வந்து எடம் கெடெச்சிருக்கு பாத்தீகளா...?'' எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த அந்தக்குரல் துக்கத்துடன் நின்றிருந்த என் மௌனத்தைக் கலைத்தது.
"எம்புட்டோ பெரெயாசப் பட்டும் அவருக்கு பொறந்த மண்ணு கெடெக்கெலியே...'' ஒரு பெரியவர் துக்கத்துடன் கூறிக்கொண்டிருந்தார்.
நான் மௌனமாய் மயானத்தை விட்டு இறுகிப்போன முகத்துடன் வெளியேறினேன்.
எனக்குள் "எம்புட்டோ பெரெ யாசப்பட்டும் அவருக்கு பொறந்த மண்ணு கெடெக்கெலியே' என்ற அந்தப்பெரியவரின் குரல் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது.